பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு

செய்திகள் / தமிழ்நாடு

Published: Thursday, July 27 2023, 12:56:18

செஞ்சி அருகே பேருந்துகளின் கண்ணாடிகளை பீர் பாட்டில் வீசி உடைத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த களையூர் பகுதியில் நேற்று இரவு புதுச்சேரியிலிருந்து திருப்பத்தூர் சென்ற அரசு பேருந்து ஒன்றின் கண்ணாடியை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர், பீர் பாட்டிலை வீசி உடைத்து விட்டு தப்பினார். இதேபோல், பாண்டிச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நாட்டார்மங்கலம் அருகே இரண்டு அரசு பேருந்துகள், ஒரு தனியார் பேருந்து, மற்றும் லாரி மீது பீர் பாட்டில்கள் வீசி கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செஞ்சி போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது பேருந்துகள் மீது பீர்பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியது பாமக நிர்வாகி அறிவழகன் என்பதும் என்எல்சி விரிவாக்கப்பணிக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேருந்துகளை தாக்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து அறிவழகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நல்வாய்ப்பாக இந்த தாக்குதலில் பயணிகள் யாருக்கும் காயமேற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.