ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை-மத்திய அரசு தகவல்

செய்திகள் / இந்தியா

Published: Wednesday, July 26 2023, 10:48:34

முதியோர் ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதியோர் ஓய்வூதியத் தொகை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் எம்.பி எழுப்பிய கேள்விக்கு, மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி பதில் அளித்தார். அதில்,தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 60 முதல் 79 வயதுக்குட்பட்ட முதியோர்களுக்கு மாதம் 200 ரூபாய் வீதம் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என கூறினார். 80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள பயனாளிகளுக்கு ஓய்வூதியத் தொகை மாதம் 500 ரூபாய் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார். தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என அவர் தெரிவித்தார். இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய இரண்டும் 2009 முதல் அறிமுகப்படுத்தப்பட்டன எனவும் அவர் கூறினார். 2014-15 முதல், இத்திட்டம் மத்திய நிதியுதவித் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது என்று இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.