விவசாயிகளின், வலி வேதனைகளை புரிந்த அரசு ஆட்சி அமைந்துள்ளது: பிரதமர்

செய்திகள் / இந்தியா

Published: Friday, July 28 2023, 13:27:11

விவசாயிகளின் வலி மற்றும் வேதனைகளை புரிந்த அரசு ஆட்சிக்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். ராஜஸ்தானுக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடி, சிகார் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் சில திட்ட பணிகளை தொடங்கியும் வைத்தார். 1.25 லட்சம் பிரதம மந்திரி கிசான் சம்ருதி மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த அவர், தங்க யூரியா திட்டம் ஒன்றையும் தொடங்கி வைத்துள்ளார். இதன்பின்னர், சிகாரில் பொது கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசும்போது, விவசாயிகள் ரூ.18 ஆயிரம் கோடியை பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதனால், நாட்டிலுள்ள 8 புள்ளி 5 கோடி விவசாயிகள் பலன் பெற்றுள்ளதாக அவர்ன் தெரிவித்தார். நாட்டில் 1 புள்ளி 25 லட்சம் பிரதம மந்திரி கிசான் சம்ருதி மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். வெவ்வேறு இடங்களில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஏகலைவ மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார். தொடர்ந்து பிரதமர் மோடி பேசும்போது, விவசாயிகளின் ஆற்றல் மற்றும் கடின உழைப்பு ஆகியவை மண்ணில் இருந்து பொன்னை பிரித்தெடுக்கிறது. அதனாலேயே, நாட்டின் விவசாயிகளுக்கு நமது அரசு தோளோடு, தோள் நிற்பதாக கூறினார். விவசாயியின் வலி, வருத்தம் மற்றும் கவலைகளை பற்றி புரிந்த அரசு, நாடு விடுதலை அடைந்து பல தசாப்தங்களுக்கு பின் ஆட்சிக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். இதனை முன்னிட்டே, கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளின் நலன்களுக்காக தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என பிரதமர் மோடி பேசியுள்ளார். பின்னர் ராஜ்கோட்டில் 860 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ராஜ்கோட்டில் புதிய விமான நிலைய கட்டடத்தை அவர் பார்வையிட்டார். அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, ராஜ்கோட் நகரம் பல வளர்ச்சித் திட்டங்களுடன் ஒரு சர்வதேச விமான நிலையத்தைப் பெறுவதால், இன்று ராஜ்கோட்டின் பெருநாள் என கூறினார். ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் செய்வது எளிது என அவர் கூறினார். ராஜ்கோட் பகுதியில் உள்ள தொழில்களும் பயனடையும் என அவர் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில்,சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு மத்திய அரசு உழைத்துள்ளதாக அவர் கூறினார். எளிதாக வாழ்வது,வாழ்க்கைத் தரம் ஆகியவை மத்திய அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்தார்.