அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலம் செப்.15 ஆம் தேதி வரை நீட்டிப்பு

செய்திகள் / இந்தியா

Published: Friday, July 28 2023, 13:04:22

அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை மூன்று ஆண்டுகளாக மாற்றியமைத்து மத்திய அரசு கடந்தாண்டு அவசர சட்டம் இயற்றியது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்த அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக்காலத்தை 2023ம் ஆண்டு நவ.18 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு மூன்று முறை அவருக்கு மத்திய அரசு பணி நீட்டிப்பு வழங்கி உள்ளதாக கூறி, அவரது பணி நீட்டிப்பு சட்டவிரோதம் எனவும், 15 நாட்களில் அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குனரை பணி நியமனம் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் ஜூலை 31ம் தேதியுடன் அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக்காலம் நிறைவடையும் நிலையில், பணி நீட்டிப்பு வழங்க கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் குமார் மிஷ்ராவின் பதவிக்காலத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.