எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

செய்திகள் / தமிழ்நாடு

Published: Tuesday, July 25 2023, 10:53:14

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த வாரம் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. ஏற்கெனவே அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை இன்று காலை 10 மணி முதல் வருகிற 31ந்தேதி வரை 7 நாட்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொதுப்பிரிவினருக்கு இன்று முதல் இணைய வழியில் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. தரவரிசை பட்டியலில் 25 ஆயிரத்துன் 856 இடங்களை பெற்ற மாணவர்கள் இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கலந்தாய்வின் முடிவுகள் ஆகஸ்ட் 3ந்தேதி வெளியிடப்பட உள்ளது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வருகிற 27ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.