கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார்

செய்திகள் / ஆன்மீகம்

Published: Saturday, April 16 2022, 07:54:37

உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக  நடைபெற்றது.


மதுரை மாநகரில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான சித்திரைத்திருவிழா கடந்த 5 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மனுக்கு 12-ந்தேதி பட்டாபிஷேகமும், 13-ந்தேதி திக்விஜயமும், நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், நேற்று தேரோட்டமும் நடைபெற்றது.

மறுபுறம் அழகர்மலையில் இருந்து புறப்பட்ட சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். இன்றுஅதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.

இன்று காலை 5.50 மணிமுதல் 6.20 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வையொட்டி சுமார் 4,000 போலீசார் மதுரையில் குவிக்கப்பட்டுள்ளனர்.