பொதுமக்கள் சென்னை திரும்புவதை தவிர்க்கவும்: முதலமைச்சர் வேண்டுகோள்

செய்திகள் / சற்றுமுன்

Published: Sunday, November 07 2021, 15:15:50

வெளியூர் சென்ற மக்கள் சென்னை திரும்புவதை பொதுமக்கள் 2 முதல் 3 நாட்கள் தவிர்க்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 



வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, சென்னையில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இன்று காலை முதல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் முக்கியமான பகுதிகளான வில்லிவாக்கம், புரசைவாக்கம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் அதிகம் மழை நீர் தேங்கியுள்ளதாக தெரிவித்தார். இன்று மாலை வடசென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு, அடுத்த 2 நாட்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற மக்கள் 2 முதல் 3 நாட்களுக்கு சென்னை வருவதை தவிர்க்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.